மத்திய கிழக்கு நாடு மாட்டித் தவிக்கும் நிலை


இஸ்லாம் மீண்டுமொரு புரட்சி எடுக்க மக்கள் வழித்துக் கொண்டார்கள். இஸ்லாமிய புனித ப+மிகளை தங்களது சொத்தாக பயன்படுத்தி ஆடம்பரமாக வாழ்ந்த அரபு நாடுகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. எதுவரை பொறுக்கனுமோ அதுவரை பொறுத்திருந்தார்கள் இனிமேலும் இவர்கள் பணத்திற்கும் பகட்டு வாழ்கைக்கும் நாம் கைதியாக வாழ முடியாது என்பதை ஏழைகள் உணர்ந்து விட்டார்கள்.

துனிசியா என்ற அரபு நாட்டில் நடந்த எழுச்சி ஒவ்வொரு அரபு நாட்டு மக்களினதும் சிந்தனையை தட்டி இருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் அணுசரனையில் ஆட்சி செய்யும் அரபு நாடுகள் அனைத்தும் மக்களின் உணர்வுகளையோ இஸ்லாத்தின் கண்ணியத்தையோ கவனிக்க வல்லை. தங்களுக்கு தேவையான அனைத்தையும் மக்களை பயன்படுத்தி அனுபவித்து அவர்களை புறக்கணித்து வாழ்ந்தார்கள். அதிகார ஆட்சியும் ஏழைகளுக்கெதிரான சட்டங்களுமே அவர்களிடம் நடைமுறையில் இருக்கும். அரச பரம்பரையில் அதிகார வர்க்கத்தினருக்கெல்லாம் எந்த சட்டமும் நிறைவேற்றப்படு வதில்லை. வேலையாக்களும் பணியாளர்களும் துன்புறுத்தப்படுகின்ற நிலையே அரபுநாடகளில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஏழைகள் அன்றாட வாழ்க்கையை கழிக்க முடியாதளவு மிக கொடுமையான வாழ்க்கைக்கு பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் உணர்ந்த மக்கள் யார்இதை முன்னெடுப்பார் என்று எதிர் பார்த்திருந்து இருக்கிறார்கள். துனீசியா பட்டதாரியின் உயிரின் பிண்ணணியில் மக்கள் கொந்தளித்து விட்டார்கள். இன்று ஒவ்வொரு அரபு நாடுகளும் நாளை என்ன நடக்கும் என்ற நடுக்கத்தில் இருக்கிறார்கள்.

இஸ்லாம் எவ்வளவு சமரிமை சமத்தும் சகோதரத்துவம் எளிமை என்று அறிமுகப்படுத்திருந்தது இதனை யெல்லாம் எந்த இஸ்லாமிய நாடும் பின்பற்ற வில்லை என்பதை நாம் இன்றைய மக்கள் போராட்டம் மூலம் தெளிவாகிக் கொள்ளலாம். இதனை நாம் அரபிகளின் ஆடம்பரமும் அஜமிகளின் ஆதங்கமும் என்ற தலைப்பில் எழுதிருந்தோம். இந்த புரட்சியின் மூலம் அதிகார அரபிகளின் ஆடம்பரமும் ஏழைகளின் ஆதங்கமும் என்று எமக்கு புரிய வைத்திருக்கிறது.

23 ஆண்டு கால நீண்ட கொடூர சர்வதிகார ஆட்சியின் முடிவு இப்படி தான் ஆரம்பமானது. வேலை கிடைக்காததால் அதிகார வர்க்கத்திடம் முறையிட்டு அங்கும் அவமானப்படுத்தப்பட்டதால் சாலையோரம் கடை நடத்திப் பிழைத்துக்கொள்ள நினைத்து, அதற்கும் அனுமதிதராமல் தொடர் தொந்தரவு தந்த அதிகார வர்க்கத்தின் காவல்துறையினரால் மனமுடைந்த 26 வயது வாலிபன் தன்னை நெருப்பில் பொசுக்கிக் கொண்டு இறந்து போக, ஓட்டு மொத்த துனிஷியா மக்களும் தங்கள் 23 ஆண்டு கால கோபத்தை வெளிக்காட்ட கிடைத்த தருணமாக வீதியில் வந்து போராட, போராடிய மக்களை ராணுவம் சுட்டு தள்ள, கடைசியில் மக்கள் எதிர்ப்பை தாங்க இயலாமல் அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புக நேரிட்டது.

வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள அரபு நாடு துனீசியா. இந்த நாடு அரபு நாடுகளில் அதிக கல்வியறிவைக் கொண்டதாகும். இருப்பினும் உலகை உலுக்கிய பொருளாதார சீல்குலைவிற்குப் பின், வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றில் சிக்கி அந்நாடு திண்டாடிக்கொண்டிருந்தது.

நோயினால் அவதியுற்ற பிறகும் பதவி விலகாமல், மேற்குலகின் நல்லாசியுடன் ஆட்சியில் தொடர்ந்த அன்றைய அதிபர் போர்கிபோவின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடந்தன. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அன்றைய உளவுத்துறை தலைவராகயிருந்த பின் அலி ராணுவ புரட்சி மூலம் போர்கிபோவை அகற்றிவிட்டு 1987 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக நிலைபாடுகள் எடுத்ததால், போர்கிபோவைப் போன்றே மேற்குலகு - குறிப்பாக ஃப்ரான்ஸின் நல்லாசி பின் அலிக்குக் கிடைத்தது. 23 ஆண்டு காலம் இரும்பு கரம் கொண்டு துனிஷியாவை ஆண்ட ஜனாதிபதி பின் அலியின் ஆட்சி காலத்தில் மக்களின் எதிர்ப்பு குரல்கள் தயவு தாட்சயணமின்றி அமுக்கப்பட்டன. சுமார் 10 சதவீதத்தினர் செல்வத்தில் கொழிக்க, 70 சதவீதத்துக்கும் அதிகமான சாமான்ய மக்கள் வறுமையின் கோரபிடிக்குள் சிக்கி உழன்றனர். இறுதியில் மக்கள் போராட்டம் வென்றது!

1989ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆட்சிக் கட்டிலில் இருந்த கம்யூனிஸ்டு அரசுகள் வரிசையாக வீழ்ந்தது போன்ற நிலை மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள எகிப்து, சிரியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் பெயருடன் "ஜனநாயக" நாடு என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயக நாடுகளைப் போன்றே தேர்தலும் நடத்தப்படுகிறது. ஆனால் அந்தத் தேர்தலில் "தற்போதைய அதிபர் பதவியில் நீடிக்கலாமா?" என்பது போன்ற ஒற்றைக் கேள்வியும் "ஆம் / இல்லை" என்ற பதிலும் மட்டுமே இடம் பெற்றிருக்கும். மரணிக்கும் வரை பதவியில் இருப்பவர்களே தொடர்ந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அதிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பதவியில் இருப்போருக்கு ஆதரவாக வாக்களித்ததாகவே கணக்கு காட்டப்படும். தற்போது நாட்டை விட்டு ஓடியுள்ள ஜைனுல் ஆபிதீன் பின் அலி, கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது 89 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.

எகிப்தின் அதிபராக இருந்த அன்வர் சதாத் 1981ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஹோஸ்னி முபாரக், தன்னுடைய 82ஆவது வயதிலும் 30 ஆண்டுகளாக அதிபராகத் தொடர்கிறார். துனீசியாவின் மாற்றத்திற்குப் பின் எகிப்தில் துனீசிய மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், "நான் அரபியன் என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். துனீசிய மக்களுக்கு நன்மை நடந்துள்ளது. அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய ஜனநாயகம்தான் நமக்குத் தேவை. இத்தகைய மாற்றம் அனைத்து அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் வர கடவுளிடம் வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

மற்றொருவரோ, "இது தொடக்கம்தான்..... அதிகமான எகிப்தியர்களும் இத்தகைய மாற்றத்தையே விரும்புகின்றனர். எங்களுக்கு முழுமையான மாற்றம் தேவை. அது அரசியல் மாற்றம் மட்டுமே அன்று" என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு ஓட்டம் பிடித்ததை தொடர்ந்து துனீசியாவின் ஜனாதிபதியாக தானே செயல்படுவேன் என்று பிரதமர் முஹம்மது கன்னோஷி கடந்த வெள்ளிக் கிழமையன்று அறிவித்தார். ஆனால், தேர்தல் மூலம் வேறு ஒரு அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பாராளுமன்றத்தின் தலைவர் அதிபர் பதவி வகிப்பார் என்று துனீசிய அரசியல்சாசன நீதிமன்றத் தலைவர் அறிவித்துள்ளார். "அரசியல் சாசன நீதிமன்றத் தலைவர் வேறு ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கன்னோஷி, "எதிர்கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாக செயல்படும், 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெறும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, விரட்டப்பட்ட துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் கட்சியும் தேசிய இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாடங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
துனிஷியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்குச் செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்வதாகவும் ஜனநாயகத்தின் விடிவெள்ளிகளாகவும் அடையாளம் காட்டும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. எனினும், அரபு நாடுகளிலுள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்பு மற்றும் கட்சிகள் துனிஷியா புரட்சியை வரவேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி கவிழ்ப்பு துனிஷியாவை எப்படியும் பாதிக்க போகின்றது என்றாலும் அதனுடைய தாக்கம் மத்திய கிழக்கு உள்ளிட்ட அரபு நாடுகளில் கண்டிப்பாக ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. துனிஷியாவை தூக்கி எறிந்த மக்கள் எழுச்சி தங்கள் நாட்டிலும் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் எல்லா அரபு நாட்டு தலைவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. இது வரை பின் அலியின் ஆட்சியைப் புகழ்ந்து வந்த அரபு நாடுகள் இம்மக்கள் எழுச்சிக்குப் பிறகு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இவ்வெழுச்சியை கண்டிக்காமலும் வரவேற்காமலும் பொதுவாக துனிஷியாவில் அமைதி திரும்ப வேண்டும் எனும் தொனியில் அறிக்கை விட்டுள்ளன.

பின் அலி நாட்டை விட்டு தப்பி ஓடியதுமே ஏற்கனவே ஏமனில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வரும் அலி அப்துல்லா சலேஹ்வுக்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், "கவிழ்க்கப்படும் முன் விலகி கொள்ளுங்கள்" எனும் பதாகையைத் தாங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் "துனிஷியாவின் மக்கள் எழுச்சியை பார்த்து பிற அரபு மக்களும் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

துனிஷியா ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் குவைத் அமீர், "ஒவ்வொரு குவைத் குடிமகனுக்கு 1000 தினார் தேசிய நாள் அன்பளிப்பு வழங்கப்படும்" என அறிவித்துள்ளார். ஸிரியாவில் மக்கள் குளிர்போக்கும் நெருப்பெரிக்க அரசு எண்ணெய் தரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத், ஸிரியா மட்டுமல்லாமல் ஜோர்டான் என பல்வேறு அரபு நாடுகளிலும் இது போன்ற அறிவிப்புகள் நேற்று முதல் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவை துனிஷியா தந்த அதிர்ச்சியின் உடனடி விளைவுகள் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகின்றன.

துனிஷியாவைத் தங்கள் நட்பு நாடாக பாவித்து வந்த அமெரிக்கா துனிஷியா மக்கள் போராட்டத்திற்குப் பின் பட்டும் படாமல் "காவல்துறையால் 40 நபர்கள் கொல்லப்பட்டது போன்ற அதிகார அத்துமீறல்கள் தவிர்த்து கொள்ளப்பட வேண்டியது" என்றும் "இனி மேலாவது ஜனநாயக பாதைக்குத் துனிஷியா செல்லும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது." இதற்கு, "இனி மேலாவது அமெரிக்கா அரபுகள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்" என்று எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.

சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான் தன் தலையங்கத்தில் “அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்குத் தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர வேண்டும் என்று எழுதியுள்ளது.

துனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றி கருத்து தெரிவித்த ஜோர்டானின் எதிர்ப்பு குரலான இஸ்லாமிய அமைப்பு, "இனி மேலாவது அரபு நாடுகள் சரியான சீர்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும்" என்றும் "சர்வதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர்" என்றும் வர்ணித்துள்ளது. அது போல் குவைத் எதிர்கட்சி உறுப்பினர்கள் துனிஷிய மக்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தங்கள் மக்களை ஒடுக்கி தங்கள் தனித்துவத்தை இழக்கும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
துனிஷியாவில் அமைதி திரும்ப பிரார்த்திக்கும் அதே வேளையில் இனியாவது அறிவிக்கப் படாத மேற்கத்திய நாடுகளின் அடிமைகளான அரபு நாட்டு ஆட்சியாளர்கள் ஆடம்பர வாழ்க்கை, ஊழல், சர்வாதிகார போக்கு போன்றவற்றை கைவிட்டு மக்கள் விரும்பும் நல்லாட்சி தர முன்வர வேண்டும். இல்லையேல் துனிஷியாவில் விழுந்த அடியை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் மக்களால் விரட்டி அடிக்கப் படும் நிலை வருவதற்கு முன்பே சவுதியில் தங்களுக்கொரு இடத்தை இப்போதே முன்பதிவு செய்து வைத்து கொள்வது சாலச் சிறந்தது.

No comments: